'ஆர்குட்' மூலம் மீட்கப்பட்ட பிளஸ்டூ மாணவர்
டெல்லி: குறைந்த மார்க் வாங்கியதால் மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறிய பிளஸ்டூ மாணவனை, ஆர்குட் உதவியால் கண்டுபிடித்து மீட்டுள்ளது டெல்லி போலீஸ்.
டெல்லி கீதா காலனியைச் சேர்ந்தவர் சித்தாந்த் சிங். 18 வயதாகும் இவரது தந்தை சப் இன்ஸ்பெக்டர் ஆவார். பிளஸ்டூ தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் தேறினார் சிங். எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்காததால் மனம் உடைந்த சிங் வீட்டை விட்டு வெளியேறினார்.
கடந்த மே 22ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிங் மனம் போன போக்கில் போய்க் கொண்டிருந்தார். போலீஸார் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக இருந்தனர்.
இந்த நிலையில் தனது நண்பர் ஒருவருக்கு ஆர்குட் மூலம் செய்தி அனுப்பியிருந்தார் சிங். இத்தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து சிங் எங்கிரு்நது ஆர்குட் மூலம் தொடர்பு கொண்டார் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அதில் அம்பாலா நகரிலிருந்து அவர் ஆர்குட்டை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அம்பாலா போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அவர்களின் தேடுதல் வேட்டையில் சிக்கினார் சிங்.
டெல்லியில் காணாமல் போன சிங், அம்பாலா சென்று ஆர்க்குட்டைப் பயன்படுத்தியதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டார்.