தயாநிதி வழக்கு-ஜெ கோர்ட்டில் ஆஜராக விலக்கு!
சென்னை: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைபேசி இணைப்புகள் கொடுத்தது தொடர்பாக தன்னைப் பற்றி அவதூறாக பேசிய ஜெயலலிதா மீது தயாநிதி மாறன் எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்நதுள்ளார்.
இதில், ஜூலை 1ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி ஜெயலலிதாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
இதை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவில், எனது மீதான குற்றச்சாட்டுக்கான அடிப்படை முகாந்திரம் கூறப்படவில்லை.
மாஜிஸ்திரேட் மனதை செலுத்தி ஆராய்ந்து இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. எனது வாதத்தை கேட்காமலேயே மாஜிஸ்திரேட் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இது அநீதியாகும். சட்டப்பூர்வமாக அது செல்லாது. அந்த புகார் மீது மாஜிஸ்திரேட் நீதி தொடர்பாக மனதை செலுத்த தவறிவிட்டார்.
என்னை துன்புறுத்தும் நோக்கத்திலும், ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கடமையை செய்யவிடாமலும், ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க. பொது செயலாளர் என்ற முறையில் அந்த பணியை செய்யவிடாமலும் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வளவு பொறுப்புகளை கொண்ட நான் தினசரி கோர்ட்டுக்கு வர இயலாது. தமிழக மக்களின் நலனுக்காகவே எனது முழு வாழ்க்கையையும் நான் அர்ப்பணித்து இருப்பதால் இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் ஆஜராக இயலாது. எனவே எனது சார்பில் வக்கீல் ஆஜராக அனுமதிக்க வேண்டும்.
இந்த சம்மன் அடிப்படையில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்கு வழங்க வேண்டும். இந்த சம்மனை ரத்து செய்வதுடன் தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கையும் ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எழும்பூர் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில் ஆஜராவதிலிருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேசமயம், எழும்பூர் கோர்ட் பிறப்பித்த சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications