கட்சி அலுவலக தாக்குதல்-சு.சாமி மனு தள்ளுபடி
மதுரை: ஜனதா கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை ஏற்கனவை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க துவங்கிவிட்டதால் அக்கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியின் மனு தேவையில்லாதது என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பி.பி.குளத்தில் சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சில மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் இருந்து மதுரை உயர் நீதி மன்றக் கிளைக்கு மாற்றப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணியசாமி தரப்பில், வழக்கை சிபிசிஐடி மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுவிட்டது. தற்போது 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதி ஜிஎம் அக்பர் அலி, இந்த மனு தேவையில்லாதது என்றும், அதை பைசல் செய்வதாகவும் தெரிவித்தார்.