சரப்ஜித்-பாக் முன்னாள் அமைச்சர் மீண்டும் கருணை மனு
டெல்லி: தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங் மீது கருணை காட்ட வேண்டும் என்று கோரி அதிபர் சர்தாரியிடம் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும், மனித உரிமை ஆர்வலருமான அன்சார் பர்னி புதிதாக ஒரு கருணை மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.
1990ம் ஆண்டு லாகூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நாட்களை எண்ணி வருகிறார்.
இந்தியாவின் தலையீட்டால் அவரது தண்டனை தள்ளிப் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், தூக்குத் தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்து விட்டது. இதனால் சரப்ஜித் சிங் தூக்குத் தண்டனையிலிருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சரப்ஜித் சிங் மீது கருணை காட்ட வேண்டும் என்று கோரி அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம் கருணை மனு அளிக்கப் போவதாக அன்சார் பர்னி கூறியுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே பர்னி, சரப்ஜித் சிங்கைக் காக்க போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பர்னி கூறுகையில், புதிதாக ஒரு கருணை மனுவை அதிபரிடம் சமர்ப்பிக்கவுள்ளேன். முஸ்லீம் அல்லாதவர் என்பதற்காக, பாகிஸ்தானைச் சேராதவர் என்பதற்காக, இந்தியர் என்பதற்காக சரப்ஜித் சிங்கை தூக்கிலிடுவதை நான் அனுமதிக்க மாட்டேன். ஒரு அப்பாவி தூக்கிலிடப்படக் கூடாது.
நிச்சயம் எனது கருணை மனுவை அதிபர் ஏற்பார் என்று நம்புகிறேன்.
சரப்ஜித் சிங்கின் மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது கண்டனத்துக்குரியது. இது நியாயமற்றது.
18 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டார் சரப்ஜித் சிங். அவரது வழக்கில் ஆஜராக அவருக்கு வக்கீல் அமைத்துக் கொள்ள வாய்ப்பு தரப்படவில்லை. அவர் தரப்பு வாதத்தை சொல்வதற்குக் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இப்படி இருக்கையில் எப்படி ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியும். நீதிமன்றத்தில் நீதி இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சரப்ஜித் சிங்கை ஒரு கைதியாக கோர்ட் பார்க்கவில்லை. மாறாக அவர் ஒரு முஸ்லீம் அல்லாதவர், இந்தியர் என்றுதான் பார்த்து தீர்ப்பளித்துள்ளது. இது நீதியைக் கொலை செய்வதற்குச் சமம் என்று கூறினார் பர்னி.












Click it and Unblock the Notifications