நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகள் விற்பனை-ஜெ கடும் கண்டனம்
சென்னை: லாபத்தில் இயங்கி வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதைக் கண்டித்து நாளை நெய்வேலியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இது குறித்து கோடநாட்டில் ஓய்வெடுத்தபடி அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2006ம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்தபோது, அதைக் கண்டித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதன் விளைவாக மத்திய அரசு அந்த முடிவை திரும்ப பெற்றது.
தற்போது 2009ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்து பதவி ஏற்ற ஒரு சில நாட்களிலேயே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பத்து விழுக்காடு பங்குகள் உட்பட, இந்தியாவில் உள்ள நிலக்கரி தொடர்பான 10 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது தவிர்க்க முடியாதது என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஏற்கனவே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 6.5 விழுக்காடு பங்குகள் விற்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் லாபத்தில் இயங்கி கொண்டிருக்கின்ற ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். 2008-2009ம் ஆண்டில் மட்டும் ரூ. 821 கோடி அளவுக்கு இந்த நிறுவனம் லாபம் ஈட்டியிருக்கிறது.
இப்படி லாபத்தில் இயங்கி கொண்டிருக்கின்ற, விவசாய உற்பத்திக்கும், தொழில் உற்பத்திக்கும் முதுகெலும்பாக விளங்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இதை கருத வேண்டி இருக்கிறது.
எனவே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், இந்த முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், தொழிலாளர்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக அரசை கண்டித்தும், அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் நாளை மாலை 5 மணி அளவில், நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி எம்எல்ஏ தலைமையிலும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சம்பத் மற்றும் என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கச் செயலாளர் ராம.உதயகுமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.