சென்னை வழிப்பறி-2 பொறியியல் மாணவர்கள் கைது

சென்னை நொளம்பூரை சேர்ந்த டாக்டர் ராபர்ட் (40) ராயப்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாருதி அல்டோ காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கார் தேனாம்பேட்டை அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் காரை மறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி ராபர்ட்டின் செல்போன், ரூ. 5,000 பணம், கிரெடிட் கார்ட் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர்.
இது குறித்த தேனாம்பேட்டை போலீசில் ராபர்ட் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட செல்போனில் இருந்து செல்லும் அழைப்புகளையும் அதற்கு வரும் அழைப்புகளையும் கண்காணிக்க ஆரம்பித்தனர்.
இதை வைத்து ஆவடியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரைப் பிடித்தனர். அவர் தான் செல்போனை பயன்படுத்தி வந்தார்.
விசாரணையில் அவர் நொளம்பூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (21) என்றும் ஆவடி கல்லூரியில் படித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.
இவர் தனது நண்பர்களான ஆனந்த் மேத்யூ (21), கிங்ஸ்டன் (24) ஆகியோருடன் சேர்ந்து டாக்டர் ராபர்ட்டிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் ஆனந்த் மேத்யூ, கிங்ஸ்டன் இருவரும் என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். டாக்டரிடம் பறித்துச் சென்ற கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ. 50,000க்கு பொருட்களை வாங்கியுள்ளனர்.
தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications