சாந்தோம் புனித தோமையார் ஆலயத்தில் கொள்ளை
இன்று காலை காவலாளி ரவிச்சந்திரன் ஆலயத்துக்குள் சென்றபோது மாதா சிலை அருகே இருந்த மர உண்டியல் உள்பட 4 உண்டியல்கள் மாயமாகி இருந்தன.
இது குறித்து பேராலய நிர்வாகிகள் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். துணை கமிஷனர் மெளரியா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தேவாலயத்தின் பின் பகுதியில் உள்ள படிக்கட்டு வழியே முதல் மாடிக்கு சென்று போலீசார் பார்த்தபோது அங்கு 4 உண்டியல்களும் உடைக்கப்பட்டு கிடந்தன. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
உண்டியல்களை உடைக்க உதவிய இரும்பும் குழாயும் அருகே கிடந்தது.
முன்வாசலில் 2 காவலாளிகள், பின் வாசலில் 2 காவலாளிகள் என 24 மணி நேர பாதுகாப்பு கொண்ட இந்த தேவாலயத்தில் நள்ளிரவு 1 மணிக்கே முன் வாசல் மூடப்படுவது வழக்கம்.
காவலாளிகளுக்குத் தெரியாமல் சுற்றுச் சுவர் வழியாக ஏறிக் குதித்து இந்தக் கொள்ளையை மர்மக் கும்பல் அரங்கேற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்த மாடியை யாரும் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேராலயம் முழுவதும் 52 சிறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் கொள்ளையர்கள் அதில் பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து அந்த ரெக்கார்டிங்குகளை போலீசார் வாங்கிச் சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.