கடும் வெயில் எதிரொலி - பஞ்சாபில் அலுவலக நேரங்கள் மாற்றியமைப்பு
சண்டிகர்: வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருவதால் பஞ்சாப் மாநில அரசு அலுவலக நேரங்களை மாற்றி அமைத்து அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. மேலும், மழையும் இல்லாததால் கடும் வறட்சி காணப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஒரு வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசு அலுவலக நேரங்களை மாற்றி அமைத்துள்ளது. திங்கள்கிழமை முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
அதன்படி காலை 7.30 மணிக்கு அலுவலகங்கள் தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும் என முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாதல் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது பஞ்சாபில் அலுவலக வேலை நேரம் காலை 9 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு முடிவடைகிறது.
இந்த நேர மாற்றம் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், அரசு சார்ந்த அலுவலங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பொருந்தும்.
இருப்பினும் சண்டிகரில் உள்ள அரசு அலுவலகங்களின் நேரங்களில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
அதேபோல அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்களில் ஏசி பயன்படுத்தக் கூடாது என்ற தடை உத்தரவையும் மறு உத்தரவு வரும் வரை அரசு நீட்டித்துள்ளது.