கொங்கு மண்டலத்தை புறக்கணித்தால் தனி மாநிலம் கேட்போம் - பெஸ்ட் ராமசாமி
கோவை: கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், தனி கொங்கு மாநிலம் கோரிக்கையை முன் வைத்துப் போராடுவோம் என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை, கண்ணம்பாளையம் கிளை கொ.மு.க., சார்பில், லோக்சபா தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கொ.மு.க. மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், கொ.மு.க. தனிப்பட்ட சமுதாய அமைப்பு அல்ல, கொங்கு மண்டலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு என்று துவங்கப்பட்ட அமைப்பு.
கோவை சுற்றுப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்கள் இப் பகுதியின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளன. கிடப்பில் போடப்பட்ட பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
சென்னையில் 32 புதிய மேம்பாலம், ஆகாய ரயில் திட்டம் 14 ஆயிரத்து200 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. ஆனால், கொங்கு மண்டலத்துக்கு ரயில்வே மேம்பாலம் கூட, கேட்டுப் பெற முடியவில்லை.
நொய்யலைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை, சாயக் கழிவைக் கடலுக்குக் கொண்டு செல்லத் திட்டமிடவில்லை.
கூவம் ஆற்றை 130 கோடி ரூபாய் செலவிட்டு சுத்தம் செய்து, அங்கு படகு சவாரி விடுவதாக கூறுகின்றனர். ஆனால், அவிநாசி - அத்திக்கடவு திட்டம் 700 கோடி ரூபாய் செலவிட்டால் மக்கள் பயன் பெறுவார்கள். அதே போன்று ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் போன்ற திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
அயல்நாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லாத, சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகின்றது. ஆனால், நமக்கு கோட்டா விதிக்கப்படுகிறது, அபராத கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதான் நம் நிலை. இதை மாற்றத்தான் கொ.மு.க. பாடுபடுகிறது.
வருங்காலத்தில், கொங்கு மண்டலத்தை அரசு தொடர்ந்து புறக்கணித்தால், கொங்கு மாநிலம் கேட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.