நரசிம்மராவுக்கு பாரதரத்னா-சிரஞ்சீவி கோரிக்கை
ஹைதராபாத்: மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நரசிம்ம ராவ்தான் இந்தியாவின் பொருளாதார சீரமைப்பை துணிச்சலுடன் தொடங்கி வைத்தவர். நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர் அவர்தான்.
அவர் பிரதமரான பின்னர்தான் வல்லரசு நாடுகளுடனும் போட்டி போடும் அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.
அப்படிப்பட்ட நரசிம்ம ராவுக்கு உண்மையான கெளரவத்தையும், மரியாதையையும் நாம் வழங்கியிருக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரஜா ராஜ்ஜியம் சார்பிலும், என் சார்பிலும் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்றார் சிரஞ்சீவி.
முன்னதாக நரசிம்ம ராவின் 89வது பிறந்த தினத்தையொட்டி ஹைதராபாத்தில் உள்ள அவரது சமாதியான பிவி ஞான பூமியில் மலரஞ்சலி செலுத்தினார் சிரஞ்சீவி.