ரூ. 1000 கோடியில் சிலைகள் வைத்து விவகாரம் -மாயாவுக்கு நோட்டீஸ்
டெல்லி: ரூ. 1000 கோடி செலவில் கன்ஷிராம், அம்பேத்கர், மாயாவதி ஆகியோரது சிலைகள் அமைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசுப் பணத்திலிருந்து இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டு சிலைகளை வைத்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்த பொது நலன் மனுவை விசாரித்த பின்னர் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் இப்படி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக தனது சிலை மற்றும் கன்ஷிராம், அம்பேத்கர் நினைவிடங்களை மாயாவதி இரவோடு இரவாக திறந்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ரூ. 1000 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு தனக்கும், கன்ஷிராம், அம்பேத்கர் ஆகியோருக்கும் சிலைகள், நினைவிடங்களை நிறுவியுள்ளார் மாயாவதி.
இது அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறும் செயலாகும்.
மாயாவதி அரசின் திட்டத்தின் கீழ் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானையின் சிலைகள் 60 நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் மொத்த மதிப்பு ரூ. 1000 கோடியாகும்.
பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள மாயாவதியின் சிலைகள், யானை சிலைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் ரூ. 1000 கோடியை செலவிட்டு மாயாவதி சிலைகள் வைத்ததை கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்திய அரசியலில் இதை விட அவமானகரமான விஷயம் வேறு ஏதாவது உள்ளதா என்றும் அவர் கேட்டுள்ளார்.
இப்படி மக்கள் வரிப்பணத்தை செலவிட்டுக் கொட்டியுள்ளதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழைகளின் வளமை சூறையாடப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications