தமிழறிஞர் வ.அய்.சுப்ரமணியத்திற்கு கருணாநிதி புகழாரம்
சென்னை: மறைந்த மூத்த தமிழறிஞரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான வ.அய். சுப்ரமணியத்தின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று காலை மரணமடைந்தார் வ.அய். சுப்ரமணியம்.
அவரது மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி..
பேராசிரியர் முனைவர் வ.ஐ. சுப்பிரமணியம் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணை தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்தார். தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராகவும், திராவிட பல்கலை கழகத்தின் இணை வேந்தராவும் விளங்கியவர் அவர்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கிட அடித்தளமிட்டவர். திராவிட மொழியியல் பள்ளியை திருவனந்தபுரத்தில் நிறுவினார்.
முரசொலி அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் விருதினை பெற்றவர். உலக அளவில் தமிழ் மொழியின் பெருமையை உரியவாறு வெளிப்படுத்தியவர்.
தேர்தல் களத்தில் கூட தமிழர் நாகரிகமும், பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டுமென்ற அக்கறையோடு அறிக்கை விட்ட பண்பாளர்களில் ஒருவர். திராவிட மொழியில் ஆய்வினை உலக அரங்கத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இடைவிடாது பணியாற்றி வந்தவர்.
அவரது மறைவு தமிழ் ஆய்வுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், தமிழ் பற்றாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications