நன்கொடை-கோட்டையை முற்றுகையிட்ட மாணவர்கள்
சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்து வரும் கல்லூரி நிர்வாகத்தை தண்டிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என கோரி அகில இந்திய மாணவர்கள் கழகம் சார்பில் இன்று சென்னையில் கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட சுமார் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக கல்வி வியாபாரமாகி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் ஆயிரம் முதல் லட்சம் வரை பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பல ஏழை மாணவர்களுக்கு உயர் படிப்பு என்பது வெறும் கனவாக போய்விட்டது. தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளை தொடர்ந்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நன்கொடை ஆரம்பிக்க தொடங்கியிருப்பது வேதனையின் உச்சக்கட்டம்.
ஏழைகள் வாழ்வில் முன்னேறுவதற்கு ஒரே நம்பிக்கையாக இருக்கும் கல்வியும் இது போன்ற செயல்களால் கலப்படமாகி வருவது அவர்களது வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிடுகிறது. கல்வித்துறையில் இருக்கும் இது போன்ற சீர்கேடுகளை உடனடியாக களைந்தால் தான் ஏழை குழந்தைகள் படிக்க முடியும்.
இந்நிலையில் இது தொடர்பாக தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதை சட்டமாக்க வேண்டும் என கூறி இந்திய மாணவர்கள் கழகம் சார்பில் மாணவர்கள் இன்று சென்னையில் அரசு தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 70 பேரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications