சேலத்தில் தொழிலதிபரை கடத்திய இருவர் கைது
சேலம்: தொழிலதிபரை காரில் சேலத்துக்கு கடத்தி ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் உமாசங்கர் குப்தா. தூத்துக்குடியில் பேக்கிங் தொழிற்சாலை நடத்தி வரும் இவர்
தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
சமீபத்தில் அவர் ஈரோடு மற்றும் பவானி பகுதியில் உள்ள நிறுவனங்களில், பேக்கிங் பொருட்களுக்கான ஆர்டரை எடுக்க ஈரோடு வந்தார். இதை அறிந்த கடத்தல் கும்பலை ஒன்று அவரிடம் சேலத்தில் இருக்கும் தங்களது நிறுவனத்துக்கு பேக்கிங் பேக் தேவைப்படுவதாக நைசாக பேசி மாருதி காரில் ஏறச் செய்தனர்.
பின்னர் அவரை சேலத்துக்கு கடத்தி சென்றனர். அங்கு அவரின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ. 1 லட்சம் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து சேலம் பள்ளப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலிடம் இருந்து உமாசங்கரை மீட்கும் முயற்சியில் இறங்கினார். அதில் வெற்றி கண்ட போலீசார் சேலத்தில கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த இருவரை மடக்கி பிடித்தனர். மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
உமாசங்கர் பத்திரமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய இரண்டு பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.