அமைச்சரின் மிரட்டல்-தலைமை நீதிபதி எச்சரிக்கை
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை மத்திய அமைச்சர் மிரட்டியதாக எழுந்துள்ள புகார் குறித்து கவலையும் கோபமும் தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.
புதுச்சேரி பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் இடைத் தரகர் மூலமாக மதிப்பெண்களை அதிகமாக போட்டதாக புதுச்சேரியைச் சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது மகன் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் டாக்டர் மற்றும் அவரது அவரது மகனுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஒருவர் நிர்பந்தித்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி புகார் தெரிவித்தார். ஆனால் அந்த அமைச்சரின் பெயரைத் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில்,
பொதுவாக இதுபோன்ற விவகாரங்களில் நாங்கள் கருத்து கூறக்கூடாது. நீதிமன்றத்திற்குள் என்ன நடந்தது அல்லது நீதிபதி என்ன கருத்தைத் தெரிவித்தார் என்பது அமைச்சகத்துக்குத் தெரியாது.
ஊடகங்கள் மூலமே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எனக்குத் தெரியவந்துள்ளது. என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள சிறிது காலம் தேவை. முதலில் பிரச்சனை என்ன என்பதை ஆராய்ந்த பின்னரே இது குறித்து கருத்து கூற முடியும்.
இதுபோன்ற விவகாரங்களில் சட்ட அமைச்சகம் நேரடியாக தலையிடாது. நீதித்துறை சுதந்திரமான அமைப்பு. அது தனது வரம்புக்குட்பட்டு நடவடிக்கைகளை எடுக்கும். சட்டத்துறை அதிகாரிகள் சட்ட வரம்புக்குள் உட்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள்
என்றார் மொய்லி.
தலைமை நீதிபதி எச்சரிக்கை:
இந்த சம்பவம் குறித்து கவலையும் கோபமும் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறும் நீதிமன்ற விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
புகார் வரவில்லை.. தமிழக அரசு:
ஆனால், இது தொடர்பாக அரசுக்கு எந்த விதமான புகாரும் வரவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அமைச்சரை நீக்க பாஜக கோரிக்கை:
இந் நிலையில் நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதே போல உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வர்மாவும் அமைச்சர் மீது நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார். சிறிய குற்றங்கள் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்குவதைவிட இதுபோல் அதிகாரமிக்கவர்கள் நீதியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் தண்டனை தர வேண்டும் என்றார் அவர்.
அதே போல அமைச்சர் குறித்து மிகவும் தைரியமாக கருத்து தெரிவித்த நீதிபதி பாராட்டுக்குரியவர் என்று நாட்டின் மூத்த வழக்கறிஞரான பாலி நாரிமன் கூறியுள்ளார்.
ஆனால், இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க புகார் தெரிவித்த நீதிபதி ரகுபதி மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications