உணவுத்துறை அலுவலகத்தில் லஞ்சம்-போலீஸ் அதிரடி
ஈரோடு: ஈரோட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில்கணக்கில் வராத ரூ. 62 ஆயிரத்து 950 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் உள்ளது. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, தாலுகா அளவில் உள்ள அலுவலகங்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்படும் நெல், ஒப்பந்த முறையில் 38 தனியார் அரிசி ஆலைகள் மூலம் அரிசியாக்கப்படுகிறது.
நெல் அரவைக்கான தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க, அதிகாரிகள் கட்டாயமாக கேட்டு, லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
மேலும், இது தவிர நெல்லின் தரம் குறித்து ஆய்வு செய்யவும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதனையடுத்து, ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி கண்ணம்மாள், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மண்டல மேலாளர் ஜெயபிரகாஷிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 23 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், போலீசார் வந்த தகவலறிந்த தரக்கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்கள் சிலர் லஞ்ச பணத்தை பதுக்கும் வகையில் மாடியில் இருந்து பணத்தை கீழே தூக்கி வீசி எறிந்தனர்.
மேல் தளத்தில் இருந்து கீழே வீசப்பட்ட ரூ. 750, தரக்கட்டுப்பாட்டு பிரிவில் நெல் மூட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட ரூ. 12 ஆயிரத்து 900, அதே அறையில் அலமாரியில் இருந்த ரூ. 22 ஆயிரத்து 500, தரக்கட்டுப்பாட்டு பிரிவில் ரூ. 3,300 என மொத்தம் ரூ. 62 ஆயிரத்து 950யை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து மண்டல மேலாளர் ஜெயபிரகாஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications