அதிமுக எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
வேலூர்: கல்லூரி சேர்க்கைக்கு சிபாரிசு கடிதம் கொடுக்காத காரணத்துக்காக அதிமுக முன்னாள் அமைச்சரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான பாண்டுரங்கனை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் பாண்டுரங்கன். இவர் ஆம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் தொகுதிக்குயில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், மனு கொடுக்க வேண்டும் என்று கூறி பாண்டுரங்கன் அலுவலகத்துக்கு வந்தார். உள்ளை நுழைந்தவுடன் அவர் பாண்டுரங்கனை ஒருமையில் பேசியதோடு ஆபாச வார்த்தைகளில் கடும் அர்ச்சனை செய்தார்.
மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பாண்டுரங்கனும் அதிமுக நிர்வாகிகளும் திகைத்துப் போனார்கள். சற்று நேரத்தில் சுதாரித்து கொண்ட அவர்கள் அந்த நபரை உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேறும் படி கூறினர்.
அப்போது அந்த நபர் அதிமுக செயலாளர் பாபுவின் கையைக் கடித்து விட்டு தான் கொண்டு வந்த பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இந்த தகவல் காட்டுத் தீ போல பரவியதால் அதிமுக நிர்வாகிகள் பாண்டுரஙகன் அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் குடியாத்தம் அருகில் உள்ள செதுக்கரையைச் சேர்ந்த தர்மன் (42) என்பவரை ஆம்பூர் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில், அவரது அண்ணன் மகளின், கல்லூரி சேர்க்கைக்கு சிபாரிசு கடிதம் கேட்டு எம்எல்ஏவை பார்க்க வந்ததாகவும், அப்போது அவர் சிபாரிசு கடிதம் கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லி வந்ததால் ஆத்திரமடைந்து அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.