''அவா அவா''.. பிரமாணர்களை கொச்சைப்படுத்திய ஓ.பி!-எஸ்.வி.சேகர் புகார்
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை மிரட்டிய மத்திய அமைச்சரின் பெயரை வெளியிட வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் எஸ்.வி.சேகர் வெளிநடப்பு செய்யவில்லை.
வெளிநடப்புக்கு பின் அவர் ஒரு பிரச்சனையை எழுப்பினார். அவர் கூறுகையில்,
நேற்று இந்த அவையில் பேசிய ஒருவர் ''அவா அவா செய்த பாவம் அவாளுக்கு. நீங்க செய்த பாவம் நோக்கு, நாங்க செய்த பாவம் நேக்கு '' என்று பேசினார். இது பிராமணர் சமுதாயம் பேசுகிற வழக்காகும். இதைக் கூறி கேலி செய்வது போல பேசி பிராமணர் சமுதாயத்தை அவர் புண்படுத்தியிருக்கிறார். இதை நகைச்சுவையாக கூட எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் பேசியது, இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் பிரச்சனையை பற்றி. அதில் நகைச்சுவைக்கு இடமில்லை.
தமிழ்நாட்டில் பின் தங்கிய நிலையில் உள்ள இந்த சமுதாயத்தினரின் பேச்சை இப்படி கிண்டல் செய்யலாமா?, வீட்டுக்குள் பேசும் பாஷையை இப்படி சொல்லலாமா?.
இந்த செய்தியை பார்த்து மையிலாப்பூர், தியாகராயநகர், ஸ்ரீரங்கம், கும்பகோணம், மாயவரம் பகுதியில் உள்ள பிராமணர்கள் பலர் போன் செய்து என்னிடம் வருத்தத்தை தெரிவித்தனர்.
பல்வேறு பிராமணர் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு இதை அவையில் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் இதை இப்போது எழுப்புகிறேன்.
இறைவன் முன்பு அனைவரும் சமம். நான் 51 முறை ரத்ததானம் செய்தவன். ஜாதி பார்க்காமல் எல்லோருக்கும் ரத்தம் கொடுத்து இருக்கிறேன். எனவே இது போன்ற கருத்துக்களை வெளியிட அவை அனுமதிக்கக் கூடாது. இதனால் நான் இன்று கறுப்பு சட்டை போட்டு வந்து இருக்கிறேன் என்றார்.
அப்போது இடைமறித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சிவபுண்ணியம், திராவிடக் கொள்கைக்கே வேட்டு வைக்கும் வகையில் எஸ்.வி. சேகர் பேசுகிறார். அதை நீங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.
இதையடுத்து பதிலளித்த அமைச்சர் அன்பழகன், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை கூறி இப்படிப்பட்ட கருத்தை வெளியிட்டிருந்தால் அது அவை நடவடிக்கையில் இடம் பெற கூடாது என்று சொல்லலாம். ஆனால் ஒரு வழக்கு சொல்லை அது தமிழாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும், ஹிந்தியாக இருந்தாலும், சொல்லும்போது அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது.
அதே சமயம் யாரையாவது புண்படுத்தும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டிருந்தால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
நேற்று இலங்கை பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் ''அவா அவா'' என்று பேசியது குறிப்பிடத்தக்கது.