வீட்டை ஆக்கிரமிப்பு செய்த போலி வக்கீல் உட்பட மூவர் கைது
சென்னை: சென்னையில் மத்திய அரசு அதிகாரி ஒருவரின் வீட்டை ஆக்ரமித்து கொண்ட காலி செய்ய மறுத்த போலி வக்கீல் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி மத்திய கலால் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் ரவி (42). சென்னையை சேர்ந்த இவருக்கு கீழ்ப்பாக்கத்தில் சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது. அதை சிவகுமார் (52) என்பவருக்கு சமீபத்தில் வாடகைக்கு விட்டிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வரும் சிவகுமார், வாடகை ஒழுங்காக குடுப்பதில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ரவி அவரை வீட்டை காலி பண்ண சொல்லியிருக்கிறார். ஆனால் சிவகுமார் தான் ஒரு வக்கீல் என்றும், நீதிமன்றத்தில் இந்த பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து ரவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சிவகுமாரை உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும், அவர் வீட்டை பூட்டி சாவியை ரவியிடம் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி அந்த வீட்டுக்கு பிரமிளா (30) மற்றும் ராதை (44) என இரண்டு பெண்களுடன் வந்த சிவகுமார், பூட்டை உடைத்து நீதிமன்ற உத்தரவை மீறி விட்டை ஆக்ரமித்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரவி, டெல்லியில் இருந்து சென்னை போலீசாரை தொடர்பு கொண்டார்.
இதையடுத்து போலீசார் அங்கு வந்து சிவகுமாரை வீட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்தனர். ஆனால், மிகவும் தெனாவட்டாக பேசிய சிவகுமார் போலீசாரை மிரட்டினார். வீட்டை காலி செய்ய முடியாது என கூறிவிட்டார். இதையடுத்து போலீசார் சிவகுமார், பிரமிளா, ராதை ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் சிவகுமார் தான் ஒரு வக்கீல் என கூறி வந்ததும் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.