பாளையி. 3 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ - ரூ. 50 லட்சம் சேதம்
நெல்லை: பாளையங்கோட்டையில் உள்ள 3 மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்தில் இன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகி நாசமாயின. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
பாளை மார்கெட் அருகே 3மாடி கட்டிடத்தில் தனியார் டிமார்மெண்டல் ஸ்டோர் இயங்கி வந்தது. காய்கறி, அழகு சாதன பொருட்கல், பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், தோல் பொருட்கள், எவர் சில்வர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மருந்துகள் என்று அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பணி முடிந்து, நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அதன் ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றனர். தரை தளத்தில் மட்டும் 15 ஊழியர்கள் படுத்திருந்தனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் நிறுவனத்தின் 2வது தளத்தின் பின்பகுதியில் திடீர் என்று தீப்பிடித்தது. தீ கொளுத்து விட்டு எரிந்து புகை வரத் தொடங்கிய போதுதான் கீழே படுத்திருந்த ஊழியர்களுக்கு தீ பிடித்திருப்பது தெரிய வந்தது.
உடனடியாக அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ஆனால் 2வது மாடிக்குள் நுழைய முடியாதபடி கரும்புகை சூழ்ந்ததால் கீழ்பகுதியில் இருந்து சன்னல் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் வேகமாக பரவி கொளுத்துவிட்டு எரிந்தது.
2வது தளத்தில் எளிதில் தீப்பற்ற கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், மெத்தைகள், நோட்டு புத்தகங்கள், அழகு சாதன பொருட்கள், தோல் பொருட்கள் போன்றவை இருந்ததால் அந்த தளம் முழுவதும் தீ பரவியது. 2வது தளத்தில் ஏற்பட பயங்கர தீவிபத்தில் அந்த கட்டிடம் பல இடங்களில் வெடித்து கீறல் விழுந்தது. அந்த தளத்தில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
பொருட்கள் வைக்கப்படும் மரச்சட்டங்கள், மேசைகள், மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அந்த தளம் முழுவதும் கண்ணாடிகள் உடைந்து சிதறல்கள், பொருட்கள் எரிந்து உருகியும், மயானம் போல் காட்சியளித்தது.
வெப்பம் காரணமாக முதல் தளத்தில் ஏராளமான பொருட்கள் உடைத்தும், வெடித்தும் சேதம் ஏற்பட்டது இருந்தது. சேத மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காற்றாலையில் தீ - ரூ.60 லட்சம் பொருட்கள் நாசம்
இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றானில் தனியார் மின்உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலையின் மேலாளராக சுதாகர் பணியாற்றி வருகிறார்.
எப்போதும்வென்றான் போலீஸ் நிலையத்தில் அவர் ஒரு புகார் செய்துள்ளார்.
அதில், எப்போதும் வென்றானில் நேற்று பலத்த காற்று வீசியது. இதனால் காற்றாலையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் காற்றாலையில் இருந்த மரச்சாமான்கள், விறகுகள், ஆயில் டிரம், கேபிள் வயர்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இவற்றின் சேத மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.