தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு ரத்தாகுமா?
சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வை ரத்து செய்யலமா, கூடாது என்பது குறித்து கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவருடைய கருத்துக்களையும் அரசு கேட்டுத்தான் முடிவெடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவது குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், தமிழ்நாட்டில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு,
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ள கருத்து பற்றி தேசிய அளவில் விவாதம் நடந்து வருகிறது. தமிழ் நாட்டிலும் இதற்கு ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே 6ம் வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மேல் நிலைப்படிப்புகளை தொடர முக்கியமான படிக்கல் போன்றது. பாலிடெக்னிக், ஐ.டி.ஐ, 12ம் வகுப்பு படிப்பை தொடர இது தேவைப்படுகிறது.
மத்திய அமைச்சர் சொல்லி இருப்பது ஒரு கருத்துதான். மாநில அரசுகளுடன் கலந்து பேசிய பின்னர் முடிவெடுக்கலாம் என்றுதான் அவர் கூறியிருக்கிறார்.
மாநில அரசிடம் மத்திய அரசு இதுவரை கருத்து ஏதும் கேட்கவில்லை. அப்படி கருத்துக் கேட்டால் தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு முதல்வரையும் கலந்து ஆலோசித்து அதன் பிறகு மத்திய அரசுக்கு பதில் தெரிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications