Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாழ்பாணத் தேர்தல்-தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டொராண்டோ: யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் படைப்பாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த இரண்டு ஆண்டுகளாக வன்னிப் பெரு நிலப்பரப்பில் பாரிய படையெடுப்பு நடத்தி வரலாறு காணாத இனப் படுகொலையையும் அழிவுகளையும் நடத்தியதோடு அதனைக் கொண்டாடு முகமாக கொழும்பில் வெடிகொளுத்தி ராணுவ அணிவகுப்பை நடத்தி மகிழ்ந்த ராஜபக்சே அவசர அவசரமாக யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை இரண்டுக்கும் தேர்தலை அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 8ம் நாள் இடம்பெறும் இந்தத் தேர்தலின் மூலம் தனது அரசு உலக அரங்கில் மக்களாட்சியை மதித்து நடக்கும் அரசு என்றும் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து வடக்கில் இயல்பு நிலையைக் கொண்டுவந்து விட்டோம் என்னும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதே அவரது குறிக்கோளாகும்.

போரினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் ஆறவில்லை. வவுனியாவில் 280,000 மேலான மக்கள் 25 முகாம்களில் போதிய உணவு, மருந்து, தண்ணீர் இல்லாது ஆடு மாடுகள் போல் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறே யாழ்ப்பாணத்தில் 12 முகாம்களில் 11,064 பேரும் திருகோணமலையில் 2 முகாம்களில் 6,642 பேரும் மன்னாரில் 3 முகாம்களில் 845 பேரும் ஆண்டுக்கணக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் 40,000 சிங்களப் படைகளினால் வல்வளைப்புக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மக்களது நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள், கமக்காரர்கள் போன்றோரது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.

போர் முடிந்தாலும் இலங்கை முழுதும் தமிழர்கள் தொடர்ந்து கேள்வியின்றிக் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். வன்னி மண்ணில் கடைசிவரை இருந்து மக்களுக்கு மருத்துவம் செய்த மூன்று தமிழ் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

வன்னியில் மக்களோடு மக்களாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேயின் உத்தரவின்படி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் புலம்பெயர் தமிழர்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு 4 வது மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிலர் காணாமல் போகிறார்கள்.

ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிங்களப் பகுதிகளில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

மொத்தத்தில் தமிழர்கள் மிகவும் கேவலமான முறையில் திமிர் பிடித்த சிங்கள- பெளத்த பேரினவாத அரசினால் நடத்தப்படுகிறார்கள். அவர்களது அடிப்படை உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன.

இந்த அழகில் ராஜபக்சேயின் சுதந்திரக் கட்சி கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டமைப்பில் பிறவி எடுத்ததன் பயனே சிங்களவர்கள் வீசும் அமைச்சர் பதவி என்னும் எலும்புத்துண்டை சுவைத்துக்கொண்டு அவர்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வதே என நடந்து கொள்ளும் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி கட்சியும் இடம் பெற்றுள்ளது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என முழக்கம் இட்ட தேவானந்தா இப்போது தேர்தலில் தனது சுய அடையாளத்தைக் கைவிட்டு கடைந்தெடுத்த ஒரு சிங்கள- பெளத்த பேரினவாதக் கட்சியோடு வெட்கமோ துக்கமோ இன்றி தேர்தல் கூட்டு வைத்துள்ளார்.

தனிமனித கட்சி நடத்தும் ஆனந்தசங்கரியாரும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். இவர் தேவானந்தாவுக்கு சற்றும் இளைக்காதவாறு ராஜபக்சேக்கு சாமரம் வீசுபவர். புலிகளுக்கு எதிரான போருக்கும் தமிழ் மக்கள் மீது ராஜபக்சே நடத்திய இனப் படுகொலைக்கும் அதனால் ஏற்பட்ட அவலத்துக்கும் பச்சைக் கொடி காட்டியவர்.

சந்தடி சாக்கடியில் ராஜபக்சேயின் அரசு போலவே போர் வெற்றியை வெடிகொளுத்திக் கொண்டாடிய ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழர்கள் மடையர்கள் என்ற எண்ணத்தில் தேர்தலில் குதித்துள்ளது.

இந்தப் பின்னணியில்தான் யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபை வாழ் தமிழ் வாக்காளர்களுக்கு தமிழினத்தின் விடுதலை வேட்கையை வெளிப்படுத்த ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஒரு சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லாது சிங்கள ராணுவத்தின் துப்பாக்கி முனையில் தேர்தல் நடைபெற்றாலும் அடக்குமுறைக்கு அடிபணியாது தன்மானத்தை விலைபேசாது துணிச்சலோடு தமிழின எதிரிகளை இத் தேர்தலில் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

குறிப்பாக ராஜபக்சேயின் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடித்து தமிழின எதிரிகளுக்கு தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும்.

தமிழரின் அடிப்படை கோரிக்கைகளான தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தன்னாட்சி உரிமைக்குப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு ஒருமனதாக வாக்களித்து அவர்களை வெற்றி அடையச் செய்யுமாறு தமிழ் வாக்காளப் பெருமக்களை அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறோம்.

புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டு தன்மானம் இழக்காது அரசியல் சோரம் போகாது போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்யுமாறு தங்கள் உற்றார் உறவினரைக் கேட்குமாறு வேண்டுகிறோம்.

பச்சை சிங்கள- பெளத்த இனவாதம் பேசும் மகிந்த ராசபச்சேயின் கோர முகத்தை அனைத்துலக மட்டத்தில் கிழித்துக் காட்டி எமது ஒற்றுமையை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை நழுவ விடாது தக்கமுறையில் பயன்படுத்துமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+