அரசியலமைப்புத் திருத்தம் அமலாக்கப்படும்: ராஜபக்சே
விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டி விட்டு தமிழ் மக்களுக்குரிய அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படும். அவர்கள் மறுவாழ்வு உறுதி செய்யப்படும். 13வது அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என ஏகப்பட்ட உறுதிகளை அளித்திருந்தார் ராஜபக்சே.
ஆனால் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை. மேலும், சிங்களக் கட்சிகள் 13வது திருத்தத்தை அமல்படுத்தினால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மிரட்டி வருகின்றன.
ராஜபக்சே அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சிங்கள ஹெல உருமயா, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தினால் ஆட்சியிலிருந்து விலகி விடுவோம் என மிரட்டியுள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனாவும் கூட 13வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அரசும் கூட எவற்றையும் அமல்படுத்தும் நோக்கில் இருப்பதாகவும் தெரியவில்லை.
இந்த நிலையில் நிச்சயம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தம் நிச்சயம் அமலாக்கப்படும். இதை யாராவது எதிர்த்தால் அதைப் பொருத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
இதுகுறித்து செய்தித் தொடர்புத் துறை அமைச்சர் லட்சுமண் யாபா அபயவர்த்தனா கூறுகையில், யாரிடமிருந்து நெருக்குதல் வந்தாலும் அதற்குப் பணியப் போவதில்லை என்று அதிபர் உறுதியாக உள்ளார்.
அதிபரின் இல்லத்தில் நடந்த கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளும் அதிபரின் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளன.
சிங்கள ஹெல உருமயா, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் அரசின் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்று அதிபர் கேட்டுக் கொண்டார்.
அதிபரின் முயற்சிகளுக்கும், அவரது நிலைப்பாட்டுக்கும் எந்தக் கூட்டணிக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எதையும் தான் செய்யப் போவதில்லை என்றும், முதல் பெரும் பிரச்சினையை (விடுதலைப் புலிகள்) இந்த அரசு வென்று விட்டது. அடுத்த பெரும் பிரச்சினையை (அரசியல் தீர்வு) வெல்லவும் தனக்கு உதவ வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளை அதிபர் கேட்டுக் கொண்டார்.
13வது சட்டத் திருத்தம், மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படாது. இந்த சட்டத் திருத்தம், இலங்கைக்கு விருப்பமில்லாத வகையில், இந்தியாவால் திணிக்கப்பட்டது என்றாலும் கூட இதை முழுமையாக அமல்படுத்த எந்தவித சட்டச் சிக்கலும் இல்லை என்றும் அதிபர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அதிபர் கையாண்ட வழிகளில் சில கூட்டணிக் கட்சிகளுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட அவற்றை எதிர்த்து அந்தக் கட்சிகள் எதுவும் செய்யவி்ல்லை. அதேபோல இப்போதைய அதிபரின் முயற்சிகளில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் குந்தகம் விளைவிக்காமல் அமைதியாக இருப்பார்கள் என்றார் யாபா.