நாளை அரசு டாக்டர்கள் ஒரு நாள் அடையாள ஸ்டிரைக்
சென்னை: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பயிற்சி மருத்துவர்கள், முது நிலை மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க்க கோரியும் தமிழகம் முழுவதும் நாளை அரசு டாக்டர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளனர்.
ஏற்கனவே பயிற்சி மருத்துவர்களின் ஸ்டிரைக்கால் அரசு மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு டாக்டர்களும் ஸ்டிரைக்கில் குதிப்பதால் நாளை அரசு மருத்துவனைகளில் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
உதவித் தொகையை அதிகரித்துத் தரக் கோரி பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று உதவித் தொகை உயர்வை முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் இது போதாது என்று கூறி போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள் பயிற்சி மருத்துவர்கள். இதுதொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்து விட்டது.
இந்த நிலையில் அரசு மருத்துவர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.
அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்க கோரியும், பயிற்சி டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் நாளை அரசு மருத்துவமனைகளில் பணிகள் பெருமளவில் முடங்கும், நோயாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications