சிமெண்ட் உற்பத்தியில் புதிய முயற்சி.. லீலாக் உடன் கைகோர்த்த அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம்
சென்னை: அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட்ஸ், பிரிட்டனின் லீலாக் நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தில் குறைந்த கார்பன் சிமெண்ட் திட்டத்தை உருவாக்குகிறது. கார்பன் சேகரிப்பு மற்றும் கலப்பு மின்சார வெப்பமாக்கல் தொழில்நுட்பங்கள் மூலம் உமிழ்வைக் குறைத்து, நிலக்கரி பயன்பாட்டை தவிர்க்கும் இந்தத் திட்டம், ஆண்டுக்கு 10 லட்சம் டனுக்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடைச் சேகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட்ஸ், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் குறைந்த கார்பன் சிமெண்ட் தயாரிக்க பிரிட்டன் நிறுவனமான லீலாக் உடன் புதிய பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. குஜராத்தில் உள்ள சங்கிபுரம் சிமெண்ட் ஆலையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிமெண்ட் தயாரிக்கும்போது வெளியாகும் கார்பன் உமிழ்வைக் கணிசமாகக் குறைக்க இந்த ஒத்துழைப்பு உதவும்.

இந்த கூட்டாண்மையின் நோக்கம், சிமெண்ட் உற்பத்தியால் ஏற்படும் கார்பன் உமிழ்வை கணிசமாகக் குறைத்து, இந்தியாவில் நிலையான சிமெண்ட் உற்பத்திக்கு வழிவகுக்கும் மேம்பட்ட கார்பன் சேகரிப்பு மற்றும் கலப்பு மின்சாரமயமாக்கல் (Hybrid Electrification) தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்வதாகும்.இந்த முன்னோடி திட்டம், அம்புஜா சிமெண்ட்ஸின் ஆண்டுக்கு 6.6 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட சங்கி சிமெண்ட் ஆலையில் செயல்படுத்தப்பட உள்ளது.
சிமெண்ட் உற்பத்தி செயல்முறையின்போது தவிர்க்க முடியாமல் உருவாகும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளைப் பிடித்து சேகரிப்பதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், லெய்லாக் நிறுவனத்தின் கார்பன் சேகரிப்பு தொழில்நுட்பம் மற்றும் கலப்பு மின்சார வெப்பமூட்டும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் சாத்தியக்கூறுகள் இதில் ஆய்வு செய்யப்பட உள்ளன.
இந்த தொழில்நுட்பம் சிமெண்ட் உற்பத்தியில் நிலக்கரியின் பயன்பாட்டை முற்றிலும் நீக்குவதுடன், மாற்று எரிபொருட்களை நெகிழ்வான முறையில் பயன்படுத்தவும் உதவும் திறன் கொண்டது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், இதனை 7 முதல் 8 மடங்கு வரை விரிவுபடுத்த முடியும். மேலும், ஆண்டுதோறும் 10 லட்சம் டன்களுக்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடைச் சேகரிக்கும் திறனைப் பெற முடியும். முன்மொழியப்பட்ட இந்த வசதி, உலகின் மிகப்பெரிய தொழில்துறை அளவிலான குறைந்த கார்பன் சிமெண்ட் திட்டங்களில் ஒன்றாக மாறும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் பசுமை எதிர்காலம்
இது குறித்து அம்புஜா சிமெண்ட்ஸ் இயக்குநர் கரண் அதானி கூறுகையில், "சிமெண்ட் துறையை குறைந்த கார்பன் பாதைக்கு மாற்ற தொழில்நுட்பமும், நல்ல பார்ட்னர்ஷிப்பும் முக்கியம். லீலாக் உடனான இந்த ஒப்பந்தம் எங்களது நிலையான வளர்ச்சி அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது," என்றார். இந்த முயற்சி அம்புஜா சிமெண்ட்ஸின் 2050 நெட்-ஜீரோ இலக்கின் ஒரு பகுதி. நிறுவனம் ஏற்கெனவே 1 ஜிகாவாட் பசுமை மின்சாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த பார்ட்னர்ஷிப் மூலம் கார்பன் சேகரிப்பு தொழில்நுட்பத்தை இந்திய சிமெண்ட் தொழிலில் பெரிய அளவில் கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. லீலாக் லிமிடெட் CEO டேனியல் ரென்னி கூறுகையில், "அம்புஜா உலகின் மிகப் பெரிய சிமெண்ட் நெட்வொர்க்குகளில் ஒன்றை நடத்தி வருகிறது. உலக சிமெண்ட் தொழிலுக்கு எளிய, சிக்கனமான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற தீர்வை இணைந்து உருவாக்குவதே எங்கள் இலக்கு," என்றார்.
அம்புஜா சிமெண்ட்ஸ் தற்போது இந்தியாவில் 24 ஒருங்கிணைந்த ஆலைகள் மற்றும் 22 அரைக்கும்(grinding) யூனிட்டுகள் மூலம் 109 மில்லியன் டன் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. 2050-க்குள் பூஜ்ஜிய உமிழ்வை அடைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கழிவு வெப்ப மீட்பு உள்ளிட்ட பல பசுமை முயற்சிகளில் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. ஆஸ்திரேலிய நிறுவனமான காலிக்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான லீலாக், சிமெண்ட், சுண்ணாம்பு உள்ளிட்ட தொழில்களுக்கு கார்பன் குறைப்பு தீர்வுகளை உருவாக்கி வருகிறது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல நாடுகளில் தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications