ஜெர்மனியில் நண்பர்களுடன் ஜாலி சுற்றுலா.. கன்னியாகுமரி மாணவனுக்கு கனவிலும் நடக்கக்கூடாத சம்பவம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாவிளை வெட்டுக்குழியை சேர்ந்த ஜெப்ரின் என்பவர் ஜெர்மனி நாட்டில் இங்கோல்ஸ்டாட் நகரத்தில் உயர்கல்வி படித்து வந்தார். அண்மையில் படித்து முடித்த நிலையில் சொந்த ஊருக்கு அடுத்த மாதம் வர தயாராகி வந்தார். ஆனால் ஜெப்ரின், நண்பர்களுடன் ஏரிக்கு ஜாலியாக சுற்றுலாவாக சென்றுள்ளார். அங்கு குளிக்க சென்ற போது யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் படிக்கிறார்கள். அப்படி படிக்கும் அவர்கள் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதும் வழக்கம்.. அப்படி சுற்றுலா சென்ற கன்னியாகுமரி இளைஞருக்கு நடந்த சம்பவமும், அவரது பெற்றோருக்கு அடுத்து வந்த அழைப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாவிளை வெட்டுக்குழியில் கிறிஸ்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர் ஆவார். இவரது மனைவி பிளாரன்ஸ் இன்பம். இவரும் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவர்களுக்கு 29 வயதில் ஜெப்ரின் என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. மகள் திருமணமாகி கணவருடன் வசிக்கிறார்.
மகன் ஜெப்ரின் தோவாளையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் படித்து விட்டு ஜெர்மனி நாட்டில் இங்கோல்ஸ்டாட் என்ற நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்க சென்றார். இவரது படிப்பு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஊருக்கு திரும்பி வர இருந்தார்.
இந்த சூழலில் கடந்த ஜூலை 12-ந் தேதி கிறிஸ்துராஜுக்கு ஜெர்மனியில் இருந்து ஒரு போன் வந்துள்ளது. அதில் ஜெப்ரினுடன் படிக்கும் மாணவர் ஒருவர் பேசினார். அந்த மாணவர், ஜெப்ரின் நண்பர்கள் சேர்ந்து ஏரியில் குளிக்கச் சென்றதாக கூறியிருக்கிறார். அப்படி சென்ற போது, சட்டென சில நொடிகளில் ஏரியில் மூழ்கி ஜெப்ரின் இறந்து விட்டதாகவும், உடல் மருத்துவமனை அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதைக்கேட்டு கிறிஸ்துராஜும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பியான விஜய் வசந்த்துக்கு கிறிஸ்துராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஜெப்ரினின் உடலை தாயகம் கொண்டு வர எம்.பி. வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகியுள்ளார். விரைவில் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படிப்பு படிக்க ஜெர்மனி சென்ற குமரி மாணவர் அடுத்த மாதம் திரும்பி வர இருந்த நிலையில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications