No for Anbumani: இனி பாமகவில் நான் இல்லை! அன்புமணியை ஏற்க முடியாது! சேலம் அருள் திட்டவட்டம்
சேலம்: அன்புமணிக்காக என் உயிரை பணயம் வைத்தேன், அவரை தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேட்டி அளித்துள்ளார். இனி தனது பாதை எது என்பதை ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக் கூடாது. ராமதாஸை ஏற்ற பாஜகவினர் அன்புமணியை ஏற்க தயாராக இல்லை.

அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொள்ள போவதில்லை. எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். 6 முறை வாய்ப்பு தந்து 7ஆவது முறை எம்எல்ஏவாக்கியவர் ராமதாஸ். சோதனையான சூழலில் அன்புமணிக்காக என் உயிரை பணயம் வைத்தேன்.
திமுக, அதிமுகவில் இருந்து எனக்கு அழைப்பு வந்துள்ளது. விரைவில் எனது முடிவை அறிவிப்பேன். இனி பாமகவில் நாங்கள் இல்லை. தவெகவில் இணைவதற்கும் எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது என அருள் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பே ராமதாஸும் அன்புமணியும் மோதல் போக்கை கடைப்பிடித்ததால் கட்சியும் இரண்டாக பிரிந்தது. அன்புமணி தலைவர் என்ற முறையில் கட்சியும் சின்னமும் அவரிடம் இருந்தது.
இருவரும் தனித்தனியே செயல்பட்டு வந்தனர். அருள், ஜி.கே.மணி உள்ளிட்டோர் ராமதாஸுடனும், திலகபாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் அன்புமணியுடனும் பயணித்தனர். இரு தரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவது, சேர்ப்பதுமாக இருந்தது. மகள் காந்திமதியை பாமக செயல்தலைவராக நியமித்தார் ராமதாஸ்.
கடந்த தேர்தலில் கூட ராமதாஸ் தனிச் சின்னத்தில் குறிப்பிட்ட தொகுதிகளில் சசிகலா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். ஆனால் ராமதாஸ் நிறுத்திய வேட்பாளர்கள் வெல்லவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமதாஸின் திருமண நாளையொட்டி தனது மனைவி , மகள்கள், பேரப்பிள்ளைகள் சகிதமாக தைலாபுரம் வீட்டிற்கு அன்புமணி சென்றார்.
அங்கு வீட்டு வாசலிலேயே வீட்டு பணியாளர்கள் ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்றனர். இதையடுத்து உள்ளே சென்ற அன்புமணி, தனது தந்தை ராமதாஸை பார்த்ததும் அழுதார். அவரும் மகனை ஆரத்தழுவி அழுதார். பின்னர், இந்த மோதல் போக்கின் இடைப்பட்ட காலத்தில் பிறந்த கொள்ளு பேத்தியை ராமதாஸ் முதல்முறையாக பார்த்து கொஞ்சினார்.
இவர்கள் அழுவதை பார்த்து சவுமியாவும் அழுதார். பின்னர் அன்புமணியும் சௌமியாவும் அன்புமணி- சரஸ்வதி காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதையடுத்து அன்றைய தினம் அவர்களுக்கு மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டுவிட்டு திரும்பினர். என்னதான் தந்தையும் மகனும் ஒன்றிணைந்தது ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அவரது தலைமையை ஏற்பதில் விருப்பமில்லாத நிலை இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் பாமக அருள் தனியே செயல்பட்டு வருகிறார். இன்று சேலத்தில் தனது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 3000 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அருள், "வன்னியர்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் அன்புமணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம். இனி நாங்கள் பாமகவில் செயல்பட போவதில்லை, பொறுப்பாளர்களிடம் இருந்து கருத்து கேட்டிருக்கிறோம். தற்போது ஆடி மாதம் தொடங்கிவிட்டதால் விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும்.
மறப்போம், மன்னிப்போம் என ராமதாஸ் சமாதானம் பேச அழைப்பு விடுத்தாலும் நாங்கள் செல்ல மாட்டோம். தந்தையும் மகனுமாக இணைந்ததை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தலைவராக இணைந்தது எங்களுக்கு தெரியாது.
எடப்பாடி பழனிசாமியின் மனசாட்சியாக இருக்கும் இளங்கோவன் எனக்கு போன் போட்டு அதிமுகவில் இணையுமாறு கேட்டார். அது போல் திமுகவின் மிக முக்கிய பிரமுகர் திமுகவில் இணையுங்கள் என்றார். தவெகவிலும் எங்களுக்கு அழைப்பு வந்தது. எங்கள் ஆதரவாளர்கள் சிலர் தவெகவில் இணைய முயன்ற போது அன்புமணி, தவெகவின் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரை வைத்து அதை தடுத்து நிறுத்தினார். ஆனால் தற்போது தவெகவும் கதவை திறந்து வைத்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் மட்டுமே இதுவரை என்னிடம் பேசவில்லை. தவாக வேல்முருகனும் பேசிவிட்டார். புது கட்சியா, வேறு கட்சியில் இணைவதா என்பதை விரைவில் அறிவிப்போம். எங்கு சென்றாலும் ராமதாஸ் எங்களுக்கு தெய்வம் என அருள் உருக்கமாக தெரிவித்தார்.














Click it and Unblock the Notifications