நர்சிங் மாணவிகள் கற்பழிப்பு-பிரதமருக்கு கேரளா கடிதம்
திருவனந்தபுரம்: ஆந்திராவில் கேரளாவை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம் கொவூர் சட்டசபை தொகுதி தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ டி.வி.ராமாராவ். இவர் மேற்கு கோதவரி மாவட்டத்தில் நிடடோவலு என்ற பகுதியில் ஸ்புருகா நர்சிங் கல்லூரி என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் அந்த கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னை எம்எல்ஏ கற்பழித்துவிட்டதாக புகார் செய்தார். இவரை தொடர்ந்து மேலும் 4 மாணவிகள் அவர்களை தங்களை கற்பழிக்க பலமுறை முயன்றதாக கூறினர்.
அந்த எம்எல்ஏ மாணவிகளுக்கு ஆசை காட்டியதாகவும், அதற்கு மசிய மறுக்கும் மாணவிகளை மிரட்டியதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த மாணவிகள் ஆந்திர உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டியை சந்தித்து புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்து அவர்கள் ஆந்திர மாநில கவர்னர் என்.டி.திவாரியையும் சந்தித்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இந்த வழக்கை சிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கேரள அரசு கண்டித்துள்ளது. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களுக்கு கேரள சுகாதார துறை அமைச்சர் டிகே ஸ்ரீமதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எம்எல்ஏ மறுப்பு...
ஆனால், இதை எம்எல்ஏ ராமாராவ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற செயல்களில் சிலர் இறங்கியுள்ளனர். நான் நீதிக்காக போராடுவேன். இந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல என்பதை நிரூபிப்பேன். நான் ஒரு தலித் என்பதால் எனக்கு எதிராக கொடுமை நடக்க பார்க்கிறது என்றார்.
பொய் வழக்கு...
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடு கூறுகையில், ஆந்திர அரசு, தெலுங்கு தேசம் எம்எல்ஏவை பொய் வழக்கில் மாட்டிவிட பார்க்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications