திருப்பதி கோவிலில் பாம்பு-பக்தர்கள் அலறி ஓட்டம்
திருப்பதி: திருப்பதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்த அறை ஒன்றில் பாம்பு புகுந்ததால், பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் பணக்கார கடவுள் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்றும் சுவாமியை தரிசக்க பக்தர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர். நீண்டு வரிசையில் நின்றிருந்தனர். அப்போது வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 17வது அறைக்குள் திடீரென ஒரு பாம்பு நுழைந்தது.
பாம்பை கண்டதும் படையே நடுங்கும் என்பதால் பக்தர்கள் கூட்டமும் அலறியடித்து கொண்டு ஓடியது.
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர். அதன் பின்னரே பக்தர்கள் நிம்மதியாக தரிசனத்துக்கு சென்றார்கள்.
தற்போது திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்குவதற்கு இடமின்றி பல பக்தர்கள் கொட்டும் பனியில் வெட்ட வெளியில் படுத்து உறங்கி வருகின்றனர்.