குடிபோதையில் ரகளை-போலீசை கடித்த ஏட்டு!
சென்னை: சென்னையில் நடுரோட்டில் குடிபோதையில் ரகளை செய்த ஏட்டு ஒருவர் தன்னை சமாதானம் செய்ய முயன்ற சக போலீஸ்காரரை கடித்து காயப்படுத்தினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் ராமச்ச்ந்திரன் (51). அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு வரும் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது. இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர் சமீபத்தில் தான் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவர் திருவான்மியூர் சிக்னல் அருகே அந்த பக்கமாக செல்லும் ஆட்டோக்காரர்களிடம் வம்பிழுத்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை நிறுத்தி மண்ணடியில் இருக்கும் தனது வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், ஆட்டோ டிரைவர் வர மறுத்துவிட்டார்.
இதையடுத்து ராமச்சந்திரன் ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்தார். அப்போது அங்கு ஏட்டு ராமச்சந்திரனுடன் பணிபுரியம் ராஜேந்திரன் என்பவர் அங்கு வந்தார். அவர் ராமச்சந்திரனை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், குடிபோதையில் இருந்த ராமச்சந்திரன் அவரை கடுமையாக திட்டியுள்ளார்.
என்னைவிட வேலை அனுபவம் குறைந்த நீ எனக்கு புத்தி கூறுவதா என கூறி அவரை அடித்து, உதைத்துள்ளார். மேலும், அவரது கையில் பலமாக கடித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் மோதி கொள்வதை பார்த்த பொது மக்கள் அப்பகுதியில் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். இந்த தகவலை கேள்விப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துறை அந்த இடத்துக்கு விரைந்து வந்து ராமச்சந்திரனை கைது செய்து, திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அவர்கள் ஏட்டு ராமச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications