விரைவில் பி.இக்கு இணையான பி.எஸ். படிப்பு
சென்னை: பி.இ. படிப்புக்கு இணையான பி.எஸ். என்ற 4 ஆண்டு பொறியியல் படிப்பை அறிமுகம் செய்யவுள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
சென்னையில் நடந்த கல்லூரி ஆசிரியர் கழக மாநாட்டில் பேசிய அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ கூறுகையில்,
இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் 12 சதவீதம் பேர்தான் உயர் கல்வி படிக்கின்றனர். இதற்கு காரணம் போதிய கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருந்துள்ளன. இதற்கு காரணம் பொருளாதார நிலைதான்.
கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பலர் உயர் கல்வியைத் தொடரமுடியாமல் தவிக்கின்றனர். கல்விக் கட்டணம் செலுத்த முடிந்தும் சில மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிக்க வசதி இல்லாததால் படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
ஏழை மாணவர்கள் படித்தவுடன் வேலைக்கு செல்லும் வகையில் குறைந்த செலவில் தொழிற்கல்விகளைப் பல்கலைக்கழகங்கள் கொண்டுவர வேண்டும்.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் 3 ஆண்டு கல்லூரிப் படிப்புகள் போதாது. 4 ஆண்டு கல்லூரிப் படிப்பு படித்தவர்களுக்குத்தான் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் பிஎஸ்சி படிப்புகளைப் போன்று பிஎஸ் என்ற 4 ஆண்டு பட்டப் படிப்பை அறிமுகம் செய்யவுள்ளது. பிஎஸ்சி படித்தவர்கள் பிஎஸ் படிப்பை ஓராண்டு மட்டும் படித்தால் போதும்.
பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) இந்தப் படிப்பை ஏற்றுக் கொண்டவுடன் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றார்.