பங்குச் சந்தையில் தொடரும் பட்ஜெட் 'எஃபெக்ட்'!
மும்பை: பங்குச் சந்தையில் இன்னும் தொடர்கிறது பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட் எஃபெக்ட். ஆரம்பத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயமாக்கல் இல்லை என்று கூறிய பிரணாப் முகர்ஜி, பின்னர் 'இப்போதைக்கு இல்லை, ஆனால் பின்னர் செய்யப்படும்' என்று சமாளித்தார்.
ஆனால் சர்வதேச பொருளாதாரச் சூழல், இந்திய அரைகுறை பொருளாதார அறிவுஜீவிகளின் கணிப்புக்கேற்ப இல்லை. அரசுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கினால், இந்தியாவின் நிலைமையும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதார நச்சுச் சுழலுக்குள் சிக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை. இந்த உண்மை தாமதமாக உறைத்ததால், பல முதலாளித்துவ நாடுகள் தொழில் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முயன்று வருகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதுவரை விலை நிர்ணயத்தை சந்தை சக்திகளே நிர்ணயித்துக் கொள்ளும் முறை இருந்தது. ஆனால் இப்போது விலைகளை கட்டுப்படுத்த புதிய மெக்கானிசத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆனால் இந்தியாவிலோ, தனியார் துறையினரை வளர்த்தெடுக்க, அரசு நிறுவனங்களைப் பலிகொடுக்கும் போக்கு தொடர்கிறது.
இந்த நிலையற்ற போக்கினால் பங்குச் சந்தையிலும் பொருளாதாரத்திலும் நிலையற்ற போக்கு தொடர்கிறது.
கடந்த மூன்று தினங்களாக இந்தியப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த பங்குச் சந்தை சென்செக்ஸ் நேர முடிவில் 400 புள்ளிகளை இழந்தது.
நிப்டியில் 123 புள்ளிகள் வீழந்தன. சுஸ்லான், டிஎல்எப், டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஏசிசி, பிபிசிஎல், மாருதி போன்ற நிறுவனப் பங்குகள் மட்டும் சுமாரான லாபத்தில் கைமாறின.
சென்செக்ஸ் 13769 புள்ளியிலும், நிப்டி 4078 புள்ளியிலும் நிறைவு பெற்றது.