அருணாச்சலுக்கு வழங்கப்படும் ஆசிய வங்கி கடனை சீனா தடுக்கிறது - எஸ்.எம்.கிருஷ்ணா
டெல்லி: அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நீர்ப்பாசனத் திடடத்திற்கு நிதியுதவி அளிக்கக் கூடாது என்று ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது சீனா. இது அப்பட்டமான உள்நாட்டுத் தலையீடாகும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு கிருஷ்ணா பதிலளிக்கையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் அனைத்து உறுப்பு நாடுகளிடமும் இந்தியா தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. அரசியல் காரணங்களினால் ஒரு நாட்டுக்கு கடனுதவி தருவதை தடுக்க முடியாது என்பதை வங்கிக்கு விளக்கியுள்ளோம்.
இந்தியாவின் நிதித் திட்டங்களுக்கு சீனாவைத் தவிர அனைத்து ஆசிய வங்கி உறுப்பு நாடுகளும் ஆதரவாக உள்ளன.
அருணாச்சல் பிரதேசத்தில் நாம் மேற்கொள்ளவுள்ள நீர்ப்பாசனத் திட்டத்தை சீனா ஏற்கவில்லை. காரணம், அருணாச்சல் பிரதேசத்தை அது தனது நாட்டின் ஒரு பகுதியாக கூறி வருகிறது.
இதுகுறித்து உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மணி, இத்தாலி ஆகிய நாடுகளிடம் நாம் விளக்கியுள்ளோம்.
இதை புரிந்து கொண்ட அந்த நாடுகள் சீனாவின் ஆட்சேபனை ஏற்க இயலாதது, முறையற்றது என்று கூறியுள்ளன.
சீனா உள்ளிட்ட உறுப்பு நாடுகளிடம் அருணாச்சல் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் எந்தவித சமரசத்திற்கும் இடம் கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம்.
அருணாச்சல் பிரதேசம் நமது நாட்டின் ஒரு பகுதி என்பதை மிகவும் வலிமையான முறையில் ஆணித்தரமாக தெரிவித்து வருகிறோம்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்க்கவே இந்தியா விரும்புகிறது. சீனாவுடன் நமது நாடு தோழமை உணர்வுடன்தான் உள்ளது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய, சீன அதிகாரிகளின் கூட்டம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ளது.
மேலும் விரைவில் நான் அருணாச்சல் பிரதேசம் செல்லவுள்ளேன். நமது குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அருணாச்சல் பிரசேதத்திற்கு சென்றதை முன்பு சீனா குறை கூறியிருந்தது என்றார் கிருஷ்ணா.