நீதிபதியை உதைத்த வக்கீல்கள்-டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஒருவரை வக்கீல்கள் கும்பலாக சென்று அடித்து, உதைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து டெல்லி மாவட்ட நீதிமன்ற அலுவலகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
டெல்லி ரோகிணி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பங்கஜ் குப்தா, விவகாரத்து தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வக்கீல் இடையில் புகுந்து நீதிமன்ற பணிகளில் குறுக்கீடு செய்தார். இதையடுத்து நீதிபதி, அந்த வக்கீலை நீதிமன்ற பணிகளில் குறுக்கீட கூடாது என எச்சரித்தார்.
உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிய அந்த வக்கீல், மேலும் பல வக்கீல்களை அழைத்து கொண்டு மீண்டும் அங்கு வந்தார். அவர்கள் நீதிபதியை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் அவர்கள் நீதிபதி வீற்றிருந்த மேடையின் மீது ஏறினர். தங்களை தடுக்க வந்த நீதிமன்ற அலுவலகர்களை அலேக்காக தூக்கி வீசினர்.
தொடர்நது வெறியாட்டத்தில் ஈடுபட்ட அந்த வக்கீல்கள் நீதிபதியை அடித்து உதைத்தனர். அவரை சுவர் மீது நிற்க வைத்து அவரை அடித்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை டெல்லி பார் கவுன்சில் தலைவர் பிஎஸ் ராணா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கு கிடைத்த தகவலின் படி அவர்களை நீதிபதியை தாக்கவில்லை. அவருடன் வாக்குவாதம் மட்டுமே செய்துள்ளனர் என்றார்.
ஜனநாயக காவலர்களாக கருதப்படும் நீதிபதிகளில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.