தங்கபாலு சொத்து-2 நீதிபதிகள் விசாரணைக்கு உத்தரவு
சென்னை: காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு சொத்து விவகாரம் குறித்து 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மேலூரை சேர்ந்த கே.வி.பழனிவேலு இதுதொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் 1984ம் ஆண்டு முதல் 93ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் சில காலம் அமைச்சராகவும் இருந்த கே.வி.தங்கபாலு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐயிடம் புகார் கொடுத்திருந்தேன்.
தான் சேர்த்த சொத்து விவரங்களை அவர் தேர்தல் கமிஷனிடம் முறையாக காட்டவில்லை. ஆகவே, நான் கொடுத்த புகார் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சுகுணா இதுபற்றி பதில் தருமாறு தங்கபாலுவுக்கும், சிபிஐக்கும் உத்தரவிட்டார்.
சிபிஐ தரப்பில் இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில்,
1989ம் ஆண்டு தமிழக அரசின் கடிதப்படி மாநிலத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிப்பதற்காக 3 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியராக அல்லது பொது நிறுவனத்தில் பணிபுரிபவராக இருக்க வேண்டும். மத்திய அரசின் நிதி குறித்த விவகாரமாக இருக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடிய விஷயமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த 3 நிபந்தனைகளிலும் பாராளுமன்ற உறுப்பினர் வர மாட்டார்.
தங்கபாலு மீது கூறப்படும் குற்றச்சாட்டு மத்திய அரசு சட்டத்தின் கீழ் வராது. பாராளுமன்ற உறுப்பினர் மீது கூறப்பட்ட விஷயமாக இருப்பதால், இந்த புகார் பாராளுமன்ற செயலாளர் ஜெனரலுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அனுப்பி வைத்துள்ளோம். ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சிபிஐ கூறியிருந்தது.
தங்கபாலு தாக்கல் செய்த பதில் மனுவில், அரசியல் உள்நோக்கம் கொண்டு என்மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கிரானைட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்தேன். அதில் எனக்கு வருமானம் கிடைத்தது. இந்த வருமானத்திற்கு முறையாக கணக்கு உள்ளது.
ஆனால் நான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். எனக்கு வேண்டாதவர்களின் தூண்டுதல் பேரில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. எனது வருமானத்துக்கு முறையாக கணக்கு உள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதி, பொதுநல வழக்காக இருப்பதால் இந்த வழக்கை 2 நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications