தங்க காசு-ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய போலீசார் வீட்டில் ரெய்ட்
சென்னை: தங்க காசு மோசடியில் ஈடுபட்ட ஏஜென்ட் ஒருவரை கைது செய்யாமல் இருக்க அவரிடம் 2 போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேர் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னையில் கோல்டு குவெஸ்ட் என்ற பெயரில் தங்க காசு மோசடி நடந்தது. ரூ. 30,000 கொடுத்து ஒரு தங்க காசு வாங்கிய இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பணத்தை இழந்தனர்.
இதையடுத்து இந்த நிறுவனத்தின் இந்திய நிர்வாகிகள் புஷ்பம், பத்மா என்ற இரண்டு பெண்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த நிறுவனத்தை பூட்டி, போலீசார் சீல் வைத்தனர். மேலும், பெரோஸ்கான் உள்ளிட்ட பல ஏஜென்டுகளை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர்.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏஜென்டு பெரோஸ்கானை கைது செய்யாமல் இருக்க அவரிடம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம், ஏட்டு ராமானுஜம் ஆகியோர் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந் நிலையில் இன்று காலை இவர்களது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் சுந்தரேஸ்வர பாண்டியன் தற்போது குடியிருக்கும் சென்னை டிபி சத்திரம் வீடு, தேனியில் இருக்கும் அவரது சொந்த வீடு, புதுச்சேரியில் உள்ள அவரது உறவினர் வீடு,
சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தின் விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரிலுள்ள வீடு, ஏட்டு ராமானுஜத்தின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சிறுவை கிராமத்தில் வீடு உள்ளிட்ட 16 இடங்களில் இந்தச் சோதனை நடந்தது.