தீவிரவாதம்: சென்னை ஸ்டார் ஹோட்டல்களுக்கு 10 கட்டளைகள்!

சென்னை நகரில் நட்சத்திர ஹோட்டல்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. இதி்ல் நட்சத்திர ஹோட்டல்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதில், தீவிரவாதிகள் தாக்குதல்களை முறியடிப்பது குறித்து விளக்கிய ராஜேந்திரன் நிர்வாகங்களுக்கு 10 கட்டளைகள் பிறப்பித்தார்.
அதன் விபரம்:
1. கேமராக்கள், எச்சரிக்கை ஒலியுடன் கூடிய சிசிடிவி, மெட்டல் டிடெக்டர்கள், வெடிகுண்டுகளை கண்டறியும் கருவிகளை ஹோட்டல்கள் வைத்திருக்க வேண்டும்.
2.கேமராக்கள், சிசிடிவிகளுக்கு தனி கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும்.
3. தங்குவதற்கு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்க வேண்டும். வெளிநாட்டு பயணியாக இருந்தால் அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். அதில் தவறு இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
4. வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் உடமைகளை தீவிரமாக சோதனையிட வேண்டும்.
5. சோதனையிட தனி அறையும் இருக்க வேண்டும்.
6. வாகனங்களை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
7. வரவேற்பறையில் ஹோட்டலின் விளக்கமான வரைபடம் இருக்க வேண்டும்.
8. ஊழியர்களை வேலையில் சேர்க்கும்போது அவர்களது முழு விபரங்களையும் சேகரிக்க வேண்டும்.
9. கண்காணிப்புக்கு தனி உளவுப் பிரிவை ஏற்பாடு செய்ய வேண்டும்.
10. அருகில் இருக்கும் போலீஸ் நிலையங்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், காவல் கட்டுப்பாட்டு அறை, தீயணைப்புத்துறையின் தொடர்பு எண்களை வரவேற்புரை மற்றும் அனைத்து அறைகளிலும் தொங்க விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கமிஷனர் ராஜேந்திரன்,
சென்னை நகரில் பல்வேறு முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை கடந்த 2 நாட்களாக நடந்தது. இதைத் தொடர்ந்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில் அனைத்து ஹோட்டல்களிலும் '3 டி மாடல்ஸ்' எனப்படும் அதிநவீன சாப்ட்வேர் கட்டிட வரைபடங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம். இந்த வரை படம் மூலம் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்தையும் அதில் உள்ள அறைகளின் அமைப்பு போன்றவற்றை தனித்தனியாக ஆய்வு செய்ய முடியும்.
சென்னைக்கு என்று குறிப்பாக தீவிரவாத அச்சுறுத்தல் ஒன்றும் இல்லை. போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் முன் எச்சரிக்கையானவை தான்.
பாதுகாப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வணிக வளாகங்கள், மசூதிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந் நிலையில் கடந்த இரு நாட்களாக கடலோரக் காவல் படையுடன் இணைந்து தமிழக போலீசார் ஒத்திகை வேட்டையில் பல குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அந்தக் குறைபாடுகளை சரி செய்ய கடலோரக் காவல் படை, போலீசார் மற்றும் இன்டெலிஜென்ஸ் பீரோ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று கப்பலைக் கடத்துவது போன்ற ஒத்திகை நடந்தபோது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் பரவி துறைமுகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் கடலோர பாதுகாப்பு படையினரே தீவிரவாதிகள் போல ஊடுருவி கப்பலில் ஏற முயல, அவர்களை போலீசார் படகுகளில் சுற்றி வளைத்து எந்திரத் துப்பாக்கிகளால் மடக்குவது போன்ற ஒத்திகை நடந்ததாக பின்னர் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications