அரசு - பயிற்சி டாக்டர்கள் பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: அரசுடன் பயிற்சி டாக்டர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிந்தது. உடன்பாடு ஏற்படும் வரை ஸ்டிரைக்கைத் தொடரப் போவதாக பயிற்சி டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
உதவித் தொகையை உயர்த்தக் கோரி பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அறிவித்த உதவித் தொகை உயர்வை அவர்கள் நிராகரித்து விட்டனர். உயர்வு போதாது, கூடுதலாக தரப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பயிற்சி டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று மாலை பயிற்சி டாக்டர்கள் சங்கப் பிரதிநிதிகள், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினர்.
ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர் சிவப்பிரகாசம் கூறுகையில், கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். உடன்பாடு ஏற்படும் வரை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மாட்டோம் என்றார்.
இதன் மூலம் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் வழி தெரியவில்லை.