தமிழக கோவில்களில் யோகா-தியான பயிற்சி
சென்னை: தமிழகம் முழுவதும் 52 கோவில்களில் பொது மக்களுக்கு தினமும் காலையில் யோகா- தியான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அளிக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சட்டசபையில் இன்று தனது துறைக்கான மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்து அமைச்சர் கூறுகையில்,
நிதி வசதியும், இட வசதியும் உள்ள 52 கோவில்களில் பொது மக்கள் பக்தர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணி காக்கும் பொருட்டு தினமும் காலையில் தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு யோகா- தியான பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
114 முக்கிய கோவில்களில் புதிதாக நூல் நிலையம் தொடங்கப்படும். ஏற்கனவே நூல் நிலையங்கள் இருந்தால் அவை மேம்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் 1,229 கோவில் குளங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் தூர்வாரி செப்பனிடவும் மழை நீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவில்களில் திருட்டு, கொலை முதலிய நிகழ்வுகளை தடுக்க 31 கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
337 கோவில்களில் எச்சரிக்கை மணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 24 கோவில்களில் எச்சரிக்கை மணி அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவில் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 750ல் இருந்து 800 ஆக உயர்த்தப்படும். நிதி வசதியி்ல்லாத கோவில்களில் பூஜைகள் செய்யும் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றார்.