சென்னை: மயக்க மருந்து-2 பெண்கள் கைவரிசை
சென்னை: சென்னையில் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்து 10 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொளத்தூரில் மோகன் தெருவில் வசித்து வருபவர் ஆனந்தி. வீட்டில் இருந்த மற்றவர்கள் வெளியில் சென்றுவிட்ட நிலையில் வீட்டில் 22 வயதான ஆனந்தி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட இரண்டு பெண்கள் அவரது வீட்டுக்கு வந்து தண்ணீர் தாகம் எடுப்பதாகவும், குடிக்க தண்ணீர் கொடுக்குமாறும் கூறியுள்ளனர்.
பாவம். தண்ணீர் தானே கேட்கிறார்கள் என நினைத்த ஆனந்தி, தண்ணீர் எடுக்க சமையலறைக்குள் சென்றார். அப்போது அந்த பெண்கள் இருவரும் ஆனந்தியின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அப்போது அதில் ஒரு பெண் கையில் வைத்திருந்த மயக்க மருந்தை எடுத்து ஆனந்தியின் முகத்தில் தெளித்தார். இதில் ஆனந்தி அந்த இடத்திலே மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த பெண்கள் ஆனந்தி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்த்த ஆனந்தி நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் கொளத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த இரு பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications