யுஎஸ் விசா-போலி ஆவணம் தந்த கோவை பெண் கைது
சென்னை: சென்னை அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
கோவை மதுக்கரை சிட்கோ ரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அருண் (28) அமெரிக்காவில் பணி புரிகிறார். இவர் அல்அமீன் என்ற அருள்மொழியை (24) காதல் திருமணம் செய்து கொண்டார்.
எம்சிஏ பட்டதாரியான அருள்மொழி கோவையில் கணவர் வீட்டில் வசித்து வந்தார். அமெரிக்கா செல்ல விரும்பிய இவர் விசா பெற சென்னை அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்தார். மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்வதாகக் கூறி விசா கேட்டிருந்தார்.
இதற்கான தகுதித் தேர்வை எழுதாமலேயே, எழுதியதாக புரோக்கர் ஒருவர் போலி ஆவணம் தயாரித்தார். ஏற்கனவே இந்தத் தேர்வெழுதிய ஆண் ஒருவரின் சான்றிதழில், அருள்மொழியின் படத்தை ஒட்டி போலி ஆவணம் தயாரிக்கப்பட்டது.
அந்த போலி ஆவணத்தில் பெண் என்பதற்கு பதிலாக, ஆண் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதை அருள்மொழி கவனிக்கவில்லை.
விசா தொடர்பான விசாரணைக்காக அருள்மொழி அமெரிக்க தூதரகத்துக்கு வந்தபோது அது போலி ஆவணம் என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக ராயப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தந்தனர்.
அவரை போலீசார் கைது செய்தனர். புரோக்கரையும் பிடிக்க வலை வீசப்பட்டு்ள்ளது.