மாவோயிஸ்டுகள் மீண்டும் அட்டகாசம் - 2 சிபிஎம் தொண்டர்கள் படுகொலை
லால்கர்: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிதினாப்பூரில் லால்கர் அருகே மீண்டும் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் செய்துள்ளனர். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். கட்சி அலுவலகமும் தீவைத்து எரிக்கப்பட்டது.
சமீபத்தில் போலீஸாரால் மீட்கப்பட்ட லால்கருக்கு அருகே உள்ள சிஸ்ரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாரன் மஹதோ, குருசரண் மஹதோ ஆகிய இரு சிபிஎம் தொண்டர்களையும் அவர்களது கட்சி அலுவலகத்திலிருந்து கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள், பின்னர் இருவரையும் படுகொலை செய்தனர்.
கட்சி அலுவலகத்தையும் அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர். கைகளில் ஆயுதங்களுடன் கும்பலாக வந்த அவர்கள் முதலில் அலுவலகத்தைத் தாக்கி சூறையாடினர். அதன் பின்னர் தீவைத்துக் கொளுத்தினர்.
கொல்லப்பட்ட இருவரின் உடல்களும் கட்சி அலுவலகத்திற்கு வெளியே கிடந்தன.
தகவல் அறிந்து போலீஸார் வருவதற்குள் மாவோயிஸ்டுகள் அங்குள்ள வனப் பகுதிக்குள் ஓடி விட்டனர். அவர்களை வேட்டையாடுவது கடினம் என்பதால் போலீஸார் சம்பவ இடத்திற்கு அருகேயே நின்று விட்டனர்.