பண மோசடிப் புகாரில் கோவை அண்ணா பல்கலை. துணைவேந்தர் - விசாரணைக்கு பர்னாலா உத்தரவு
சென்னை: பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாக கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் மீது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊழல் தடுப்புப் போலீஸ் விசாரணைக்கு ஆளுநர் பர்னாலா உத்தரவிட்டுள்ளார்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் பணத்தை மோசடியாக சுருட்டியுள்ளார் என்பது ராதாகிருஷ்ணன் மீதான புகாராகும்.
ஊழல் வழக்கில் சிக்கி, ஊழல் தடுப்புப் போலீஸ் விசாரணைக்கு உட்படும் முதல் தமிழக துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதாகிருஷ்ணனின் மோசடி குறித்து வழக்கறிஞர் எஸ்.சிவபாண்டி என்பவர் ஆளுநருக்கு புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகாரைப் பரிசீலித்த ஆளுநர் பர்னாலா, இதுகுறித்து விசாரிக்குமாறு கூறி ஊழல் தடுப்பு போலீஸ் பிரிவு இயக்குநருக்கு பரிந்துரைத்தார்.
இந்த சர்ச்சை குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில், என் மீதான புகார் மனுவின் நகல் எனக்குக் கிடைத்துள்ளது. அதில் ஒரு உண்மையும் இல்லை. அத்தனையும் பொய்யான புகார்கள். எனது கரங்கள் சுத்தமானவை என்றார்.
ஆளுநரின் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மாவிடமிருந்து ஊழல் தடுப்புப் போலீஸாருக்கு ராதாகிருஷ்ணன் விவகாரத்தை விசாரிக்குமாறு கடிதம் போயுள்ளதாம். இருப்பினும் ராதாகிருஷ்ணன் முக்கியப் பதவியில் இருப்பதால் அரசின் பதிலுக்காக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் காத்திருப்பதாக தெரிகிறது. அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லையாம்.
ஆனால் ஆளுநரே விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதால், அரசு இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், அரசு இதில் தலையிட்டால் அது ஆளுநரின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும். காரணம், ஆளுநர்தான் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார். எனவே அவரது அதிகாரத்தில் அரசு தலையிட முடியாது என்கிறார்கள் அவர்கள்.
கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பெரும் பண மோசடிப் புகாரில் சிக்கியிருப்பது கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications