விரைவில் 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: குப்தா
சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
தமிழகத்தில், தொண்டாமுத்தூர், இளையாங்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம், கம்பம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. மங்களூர் தொகுதி உறுப்பினர் செல்வம் வழங்கிய ராஜினாமா கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை.
காலியாகவுள்ள தொகுதிகளில் ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் இளையாங்குடிக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். அப்படி நடத்தும்போது, மற்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்தி விட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற 14ம் தேதி சம்பந்தப்பட்ட தொகுதிகளின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து விரைவில் இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றார் குப்தா.