வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்ற ரவுடி-போலீசார் மடக்கி பிடித்தனர்
சென்னை: சென்னையில் ரவுடி ஒருவர் போலீசார் மீது வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த மாதம் 6ம் தேதி சுரேஷ்குமார் என்ற நகை வியாபாரி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசாருக்கு இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சென்னையில் இருக்கும் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து விசாரிக்க முடிவு செய்தனர். அவர்கள் ரவுடிகளை முதலில் ஏ, பி, சி என மூன்றாக பிரித்து பட்டியலிட்டனர்.
அவர்களில் வடசென்னையை சேர்ந்த ரவுடி குதிரை வெங்கடேசன் என்பவனும் ஒருவர். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். மணலியில் வசிக்கும் முதல் மனைவி இரண்டு குழந்தைகளும், ஜெஜெ நகரில் வசிக்கும் இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகளுகம் உள்ளன.
ஏற்கனவே பல கொலை வழக்குகளில் போலீசாரிடம் சிக்கியிருந்ததால் அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுவானது. இதையடுத்து அவரை பல நாட்கள் கண்காணித்தனர்.
பின்னர் அவரை கைது விசாரிக்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஜெஜெ நகரில் இருந்த இரண்டாவது மனைவி வீட்டில் தங்கியிருந்த அவரை பிடிக்க போலீசார் சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவரை சரணடையுமாறு போலீசார் கூறினர். இதையடுத்து சுதாரித்து கொண்ட வெங்கடேசன் தப்பித்து போக முடிவு செய்தார். அப்போது அவர் தான் வைத்திருந்த இரண்டு வெடிகுண்டுகளை போலீசார் நோக்கி வீசினர். அதில் ஒன்று போலீசார் இல்லாத பக்கம் விழுந்து வெடித்தது.
மற்றொன்று வெடிக்கவில்லை. அதை போலீசார் தண்ணீரில் போட்டு செயலிழக்க செய்தனர். இதையடுத்து அதிரடியாக செயல்பட்ட போலீசார் துப்பாக்கி முனையில் வெங்கடேசனை கைது செய்தனர்.
விசாரணையின் போது வெங்கடேசன் போலீசில் அளித்த வாக்குமூலம்,
நாங்கள் திருவெற்றியூரில் வசித்து வந்தோம். அப்போது அங்கு இருந்த கேட் ராஜேந்திரன் என்ற ரவுடி எனது அண்ணனை வெட்டி கொல்ல முயன்றான். அவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற பயத்தில் தான் நான் அரிவாளை கையில் எடுத்தேன்.
தற்போதும் அவனுக்கு பயந்து ஒளிந்து தான் வாழ்கிறேன். தற்போது கூலி வேலை செய்து வருகிறேன். வெளியில் செல்லும் ஹெல்மேட் இல்லாமல் செல்வதில்லை. அவனிடம் என்னை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தான் நாட்டு வெடிகுண்டுகளை கைவசம் வைத்திருந்தேன்.
தற்போது போலீசின் கவனத்தை திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாட்டு வெடிகுண்டை வீசினேன் என்றார் அவர்.