'உணவு பதப்படுத்தல்-தமிழகத்தில் தனி அமைச்சகம் தேவை'
சென்னை: தமிழகத்தில் உணவுப் பதப்படுத்துதலுக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
நாட்டில் 70 சதவீத மக்கள் விவசாயிகளே. தமிழ்நாட்டையும் விவசாய மாநிலம் என்றே சொல்லலாம். தமிழகம் தகவல் தொழில் நுட்ப துறையில் சிறந்து விளங்குவதை பாராட்டுகிறோம். அந்த துறையை விட 10 மடங்கு வேலைவாய்ப்பை தரக்கூடியது உணவு பதப்படுத்தும் துறை. இந்தத் துறை சிறப்பாக விளங்க வேண்டுமானால் அதற்காக தனித்துறை தேவை.
அதாவது தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்துதலுக்கு தனி கொள்கை உருவாக்கி, தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி, தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.
உணவுப் பதப்படுத்துதல் துறையில் தமிழ்நாடு மிகச் சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியும். காரணம் இங்கு விளையும் விவசாய பொருட்களை வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ கொண்டு செல்ல நல்ல போக்குவரத்து வசதி உள்ளது.
உலகம் முழுவதும் விவசாய பொருட்களுக்கு நல்ல விலை உள்ளது. எனவே உணவு பொருட்களை பதப்படுத்த தனி பூங்காக்கள் இந்தியா முழுவதும் 30 இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மீன்கள், இறைச்சி ஆகியவை நிறைய கிடைக்கிறது. எனவே அவற்றை பதப்படுத்தி வைக்க உணவு பதப்படுத்தும் பூங்கா அவசியம் தேவை என்றார்.