திட்டமிட்டபடி சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - அதிகாரிகள்
சென்னை: டெல்லி மெட்ரோ ரயில் பால விபத்தினால் சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் தடங்கலைச் சந்திக்கவில்லை. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன் என்று மெட்ரோ திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ளதைப் போலவே சென்னையிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தின் வழிகாட்டுதலின் பேரில்தான் சென்னை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. டெல்லி மெட்ரோ ரயில் கழக தலைவர் ஸ்ரீதரன்தான், சென்னை திட்டத்தையும் வழி நடத்தி வருகிறார்.
கடந்த 2007ம் ஆண்டு டெல்லி மெட்ரோ ரயில் கழகம், சென்னை மெட்ரோவுக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கியது.
இதையடுத்து கடந்த மாதம் 10ம் தேதி இப்பணிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில்தான் டெல்லி மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் இதனால் சென்னை திட்டம் எந்த வகையிலும் பாதிப்படையாது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன என்று சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் கழக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், டெல்லி நிலவரத்தை தொடர்ந்து கவனித்துக் கொண்டுள்ளோம்.
இருப்பினும் முன்பே திட்டமிட்டபடி 2014-15ம் ஆண்டு வாக்கில் சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications