தமிழக கோவில்களில் பெண் அர்ச்சகர்கள்?
சென்னை: அரசின் கண்காணிப்பில் உள்ள கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிப்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று காங்கிரஸ் எம்எல்ஏ காயத்ரி தேவி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பெரியகருப்பன்,
கிராமங்களில் உள்ள தனியார் கோவில்களில் பெண்கள் பூசாரிகளாக பணிபுரிகிறார்கள். தேவைப்பட்டால் அரசின் கண்காணிப்பில் உள்ள கோவில்களிலும் பெண் அர்ச்சகர்களை நியமிப்பது பற்றி முதல்வரை கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
தற்போது அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் 207 பேர் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால், அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ளது. முடிவு வந்த பிறகு அவர்களது நியமனம் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.