3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்த குழு அமைப்பு
டெல்லி: 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை மேற்கொள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான எட்டு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
3வது தலைமுறை செல்போன் சேவையை தனியார் துறையினர் வழங்குவதற்கு இந்த ஏலம் வகை செய்யும்.
தற்போது உள்ள 2ஜி தொழில்நுட்பத்தை விட அதி நவீன வசதிகளை உள்ளடக்கியது இந்த 3ஜி தொழில்நுட்பம்.
இந்த சேவையை கடந்த செப்டம்பர் மாதம் முதல் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது தனியார் துறையினரையும் இதில் நுழைய அனுமதிக்கும் வகையில் தற்போது ஏலம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான ஏலத்தை நடத்தவும், யார் யாருக்கு வழங்கலாம் என்பதை முடிவு செய்யவும் பிரணாப் முகர்ஜி தலைமையில் எட்டு அமைச்சர்கள் கொண்ட உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், சரத் பவார், ஏ.கே.அந்தோணி, வீரப்ப மொய்லி, தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா, அம்பிகா சோனி, பிருதவிராஜ் செளகான், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஏலத்தின் அளவு, வருடாந்திரக் கட்டணம், கூடுதல் நிர்வாக கட்டணம், ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டத்திலும் எத்தனை பேரை அனுமதிப்பது, ரிசர்வ் கட்டணம், பிராட்பேண்ட் சர்வீஸ், ஏலதாரர்கள் செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்டவற்றை முடிவு செய்வார்கள்.
கடந்த முறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது பெருமளவில் ஊழல் நடந்ததாக சர்ச்சை எழுந்தது. டிராய் அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சர் ராஜா கண்டுகொள்ளாமல் தன்னிச்சையாக நடந்ததால், அரசுக்கு ரூ. 22,466 கோடி இழப்பு ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
வழக்கமாக கடைப்பிடித்து வரும் முறைகளை கையாளாமல், அமைச்சர் ராஜாஸ, முதலில் வருவோருக்கு உரிமம் என்ற புதிய முறையைக் கையாண்டதால் வந்த விளைவு இது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த ஊழல் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆதாரங்களுன் செய்தி வெளியிட்டதால் இது பெரும் சர்ச்சையாக விஸ்வரூபம் எடுத்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் தற்போது 3ஜி ஏலத்தை நடத்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.












Click it and Unblock the Notifications