நடுக் கடலில் தத்தளித்த ஈழத் தமிழ் எழுத்தாளர் மீட்பு
ராமேஸ்வரம்: படகு மூலம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்து, நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பிரபல ஈழ எழுத்தாளர் திருநாவுக்கரசு என்கிற உதயனை, மீனவர்கள் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே ஐந்தாவது தீடையில், நடுக் கடலில் 3 பேருடன் படகு ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த சிலர் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். கடலோரக் காவல் படையினர் தனிப்படையுடன் அங்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 3 பேர் படகுடன் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சில மீனவர்கள் அவர்களை அருகில் உள்ள தீவுக்குக் கொண்டு வந்தனர். பின்னர் கடலோரக் காவல் படையினர் 3 அகதிகளையும் மீட்டு கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்கிற அருணாச்சலம் என்கிற உதயன் (56), சுகந்தன் (38), வவுனியாவைச் சேர்ந்த யோகராஜ் (38) என்பது தெரிய வந்தது.
இவர்களில் திருநாவுக்கரசு, ஈழத்தில் மிகப் பிரபலமான எழுத்தாளர் ஆவார். ஏராளமான நூல்களை அவர் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.